Friday, October 4, 2013

சுவாச நோய்களின் மூலிகை மருந்துகள் கண்டங்கத்திரி

மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களில் மிகவும் முக்கியமானது சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள்தான். இருமல், சளி, மூக்கடைப்பு, தொண்டைகட்டு, சுரம் என்று பற்பல விதங்களில் கப நோய்கள் பாதிக்கின்றன.

இவை அனைத்திற்கும் மூலிகை மருந்துகள் உடனடி நிவாரணம் அளிக்கின்றன. பக்க விளைவுகள் இல்லாமலும், அதே நேரம் உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய மூலிகைகளில் முக்கியமான மூலிகை கண்டங்கத்திரி.


'காச சுவாசங் கதித்தஷய மந்தமனல்
வீசு சுரஞ் சன்னி விளைதோடம்
    -ஆசுறுங்கால்

இத்தரையு னிற்கா, எரிகாரஞ் சேர்க்கண்டங்
கத்திரியுண் டாமாகிற் காண்."

இப் பாடல் அகத்தியர் குணவாகடம் நூலில் உள்ளது. இப்பாடலின் பொதுவான கருத்து கண்டங்கத்திரி மருத்துவ குணம் மிக்க மூலிகை. கண்டங்கத்திரி காசம், சுவாசம், ~யம், அக்கினி மந்தம், தீச்சுரம், சன்னி வாதம், எழு வகை தோஷங்கள், வாத நோய் ஆகியவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது, என்பதே‚

கண்டங்கத்திரி செடி வகையைச் சேர்ந்தது. எல்லா இடங்களிலும் விளையக் கூடியது. இதற்கு கபத்தை அகற்றும் தன்மை (Expectorant Action) உண்டு.

இந்த தாவரம் முழுவதும் கூர்மையான முட்களை கொண்டது. முட்கள் மஞ்சளாக, பளபளப்பாக 1.5 செ.மீ. நீளத்தில் இருக்கும். பூக்கள் நீல நிறமானவை. சிறு கத்தரிக்காய் வடிவான காய்களையும், மஞ்சள் நிறமான பழங்களையும் கொண்டது. கண்டங்கத்திரி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டவை. இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற அனைத்தும் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது.

சுகாதார சீர்கேட்டால் இன்றைய சுற்றுச்சூழல் மிகவும் சீர்கெட்டு உள்ளது. நாம் அனைவரும் சுவாசிக்கும் காற்று மாசுபட்ட நிலையில் உள்ளது. இதனால் சிலருக்கு நுரையீரல் பாதிப்படைகிறது. மேலும், சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் பிராண வாயு உறிஞ்சும் தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும், மூச்சுக்குழல் தொண்டைப் பகுதிகள் பாதிப்படைகின்றன. அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளுதல், மூக்கில் நீர் வடிதல், அதிகளவு தும்மல், மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது. இத்தகைய பிரச்சினைகளுக்கு கண்டங்கத்திரி நிரந்தர தீர்வை கொடுக்கிறது.

கண்டங்கத்திரியின் தன்மை பற்றி அக்தியர் கூறும் கருத்து :-

'மாறியதோர் மண்டைச்சூலை கூறியதோர் தொண்டைப்புண் தீராத நாசிபீடம்."

தலையில் நீர் கோர்த்தல், தொண்டையில் நீர்க்கட்டுதல், தொண்டை அடைப்பு ஏற்படுதல், பேச முடியாமல் தொண்டை அடைத்தல், மூக்கில் நீர் வடிதல், மூச்சுத் திணறல், இருமல் போன்ற அனைத்திற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது கண்டங்கத்திரி என அகத்தியர் கூறுகிறார்.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைச் செடிகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தக் கூடிய தன்மை கொண்டவை. அந்த வகையில் கண்டங்கத்திரியை ஒத்த குணமுடைய மூலிகைகளான  இண்டு, இசங்கு, தூதுவளை ஆகிய அனைத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.

இந்த பொதுப்பண்பினைக் கொண்டே கண்டங்கத்திரி அவலகம், சுதர்சண சூரணம், கனகாசவம், நெல்லிக்காய் லேகியம் ஆகிய ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆஸ்துமா குணமாக :

இண்டு, இசங்கு, கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, துளசி, வால்மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் ஒவ்வொன்றையும் 25 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 10 கிராம் எடுத்து 2 கப் நீரில் கொதிக்க வைத்து ½ கப்பாக வற்ற காய்ச்சி வடிகட்டி ஒரு வேளை அருந்த வேண்டும்.

இவ்வாறு காலை, மாலை இரு வேளை ஒரு வார காலம் அருந்தலாம். இது ஆஸ்துமாவில் மூச்சு விடத் திணறுபவர்களுக்கு நல்ல நிவாரணத்தை உடனடியாக அளிக்கும். நாளடைவில் ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

தொண்டைச் சளி குணமாக :

கண்டங்கத்திரியின் முழுத்தாவரத்தையும் சேகரித்து பின் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர் தூள் செய்து கொள்ள வேண்டும். ½ தேக்கரண்டி தூளுடன் ½ தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்து உள்ளுக்குச் சாப்பிட தொண்டை சளி குணமாகும்.

கண்டங்கத்திரி வேர் குடிநீர் :
'கரிய கண்டங் கத்திரிவேர் கார முள்ள
    சிறுதேக்கு
முரிய முத்தக் காசுடனே யொத்த சுக்குச்
    சிறுமூலம்
தெரிய விருபடி நீர்விட்டுச் சிறுகக்
    காய்ச்சிக் குடிப்பீரேல்
தரியா தோடும் வாதசுர மென்றே
    தரணிக் குரைசெவ்வாய்."
- தேரன்-குடிநீர்

கண்டங்கத்திரி வேர், கண்டுபரங்கி, மூத்தக்காசு, சுக்கு, சிறுவலுதலைவேர் இவை அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு எட்டில் ஒன்றாய் வற்றக் காய்ச்சி அருந்தினால் வாதசுரம் குறையும்.

கண்டங்கத்திரி எனும் அற்புத மருத்துவ மூலிகையின் மகத்துவம் அறிந்து அதனை பயன்படுத்தி பயன் பெறுவோமாக.

No comments:

Post a Comment