தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு.சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழக்கம். இதை தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள். தலைவாழை என்றதும் நம்அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்துதான். அது சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும் இலையில்தான் நிச்சயம் இருக்கும். இன்றைய அசுர வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது.
அதுவும் நகர்ப்புறங்களில் தட்டு அல்லது பாலிதீன் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது கால மாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம். நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்துக்கு விடுமுறை நாட்களில் செல்லும்போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர். அதை மாற்ற முயற்சிக்கலாம். வாழை இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என்பது நமக்கு தெரியவரும்.