Thursday, November 13, 2014

குளிர்காலம் முடியும் வரை சோப்புக்கு, ஷாம்புக்கு குட்பை சொல்லுங்கள்

முதல் வேலையாக குளிர்காலம் முடியும் வரை சோப்புக்கு நீங்கள் குட்பை சொல்லுங்கள். கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, ஆரஞ்சு பழத்தோல் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய வைத்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். 

அதற்கெல்லாம் நேரமில்லாதவர்கள், கடலை மாவு, பயத்தமாவுடன், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற ரெடிமேட் ஆரஞ்சு பழத்தோல் பொடியை வாங்கிக் கலந்து கொள்ளலாம். குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் சோப்புக்கு பதில் இந்தப் பொடியை மட்டுமே உபயோகிக்கவும். 


தலைக்குக் குளிக்க செம்பருத்தி இலை, சீயக்காய், வேப்பிலையை உலர வைத்து அரைத்த பொடியை உபயோகிக்கவும். குளிர் காலத்தில் பொடுகும் அதிகமாகும். முடி வறண்டு போகும். வேர்க்கால்கள் அடைபடும். இவற்றைத் தவிர்க்க வாரம் இருமுறை தலை குளியல் அவசியம். 

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் - சம அளவு எடுத்து வெந்நீர் உள்ள பாத்திரத்தினுள் வைத்து டபுள் பாயிலிங் முறையில் வெதுவெதுப்பாக சூடாக்கி, தலை முதல் கால் வரை தடவி மசாஜ் செய்யவும். எண்ணெய் முழுக்க சருமத்தினுள் இறங்கும் அளவுக்குத் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊறவிடவும். 

மேலே சொன்ன கடலைமாவு, பயத்தமாவு, ஆரஞ்சு தோல் கலவைப் பொடியை சிறிது தண்ணீர்விட்டுக் குழைத்து பேஸ்ட் போலச் செய்து, தேய்த்துக் குளிக்கவும். தலைக்கு தனியே அரைத்து வைத்துள்ள பொடியை சாதம் வடித்த கஞ்சியில் குழைத்து, மறுபடி அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி, வெதுவெதுப்பான சூட்டுடனேயே தேய்த்து அலசவும். ஷாம்புவை தவிர்க்கவும். 

குளிப்பதற்கு எப்போதும் இளம் சூடான தண்ணீரையே பயன்படுத்தவும். குளிர்ந்த தண்ணீரும் வேண்டாம். அதிக சூடான தண்ணீரையும் தவிர்க்கவும். தலைக்குக் குளித்ததும், கூந்தலைக் காய வைக்கிறேன் என்கிற பெயரில் டவலால் முடியை அடிப்பார்கள் பலர். இப்படிச் செய்தால், ஏற்கனவே பனிக்காலத்தில் பலவீனமாக இருக்கும் கூந்தலானது உடைந்து, வேரோடு உதிரும். 

No comments:

Post a Comment