Monday, November 17, 2014

தியானம் செய்ய கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்

தினமும் சுமார் 20 நிமிடங்கள் தியானம் செய்து வந்தால் நம் உடலும் மனமும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். நீண்ட நாட்கள் சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கும் அது உதவும். பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் கூட இதை நிரூபித்துள்ளன.


நம்முடைய சில உடல் குறைபாடுகளுக்கு தியானம் தான் மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது. நாம் எந்த வயதில் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம் என்பது எல்லோருக்கும் ஒரு பெரிய ப்ளஸ்! தியானம் செய்யும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.


1. முதலில் நாம் தியானம் செய்வதற்கு சரியான நேரத்தை ஒதுக்க வேண்டும். பெரும்பாலும் அதிகாலை நேரமே தியானத்திற்கு உகந்த நேரமாகும். தென்றல் அப்போது வீசுவதும் இதமாக இருக்கும். காலையில் முடியாதவர்கள், மாலை அல்லது இரவு உறங்கப் போகும் முன் தியானம் செய்யலாம். தினமும் ஒரே நேரத்தில் தியானத்தை மேற்கொள்வது நல்லது. 

2.   அடுத்து, தியானம் செய்வதற்கான பொருத்தமான இடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அமைதியான சூழ்நிலையில் தியானத்திற்கான வசதியுடன் அவ்விடம் இருக்க வேண்டும். பெட்ரூம், தோட்டம், மொட்டை மாடி உள்ளிட்ட இடங்கள் சிறந்தவை. பொதுவாக, சத்தம் குறைந்த இடமாக இருக்க வேண்டும்.     

3. தியானம் செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும். மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு தியானம் செய்தல் சரிப்படாது; சில சமயம் தூங்கி விடுவீர்கள்! அப்படியே சாப்பிட்டாலும், இரண்டு மணி நேரம் கழித்து தியானம் செய்யலாம். 

4.  தியானம் செய்ய ஆரம்பிக்கும் முன் லூசான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உட்கார்ந்து தியானம் செய்ய ஒரு குட்டிப் பாயை விரித்துக் கொள்ள வேண்டும். சம்மணம் போட்டு உட்கார்ந்து, முழங்கால்களின் மேல் கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்குமாறு உட்கார்ந்து, கழுத்தை ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின், கண்களை மூடி ஓரிரு மூச்சுக்களை மூக்கு மூலம் மட்டும் இழுத்து விட வேண்டும். 

5. தியானத்தில் அமரும்போது அதில் மட்டுமே உங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இந்தத் திறமையை வளர்த்துக் கொண்டாலே தியானத்தை வெற்றிகரமாகச் செய்ய முடியும். யாரும் தொந்தரவு செய்து விடாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமம் இருக்கும். 

ஆனால், போகப் போக சரியாகி விடும். மூடிய கண்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தேவையில்லாமல் திறக்க வேண்டாம். இரு புருவங்களுக்கும் இடையில் மூடிய பார்வையை நிலை நிறுத்துங்கள். நம்மையும் மீறிய ஒரு ஆற்றலை நினைத்துக் கொண்டு தியானத்தைத் தொடங்குங்கள்!

No comments:

Post a Comment