Wednesday, November 12, 2014

எளிய மருத்துவக் குறிப்புகள்


1. கண்ணைச் சுற்றிக் கருவளையம்:

பாலை நன்றாகக் காய்ச்சி ஆற விட்டு வடிகட்டி வைக்கவும். ஒரு கரண்டியில் அந்தப் பாலை எடுத்துக்கொண்டு, சுத்தமான வெள்ளைத் துணி அல்லது பஞ்சை எடுத்து அந்தப் பாலில் தோய்த்து, கண்களின் மீது வைத்துக்கொண்டு 15 நிமிடம் படுத்துக்கொள்ளவும். இப்படிச் செய்துவந்தால் கண் சோர்வு நீங்குவதுடன் கருவளையமும் மறைந்துவிடும். கண்கள் பொலிவுடன் இருக்கும். வெயில் காலத்தில் இது கண்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.

2. இளநரை, கண் எரிச்சல், பித்தம்:

அகத்திக்கீரையை 15 நாளுக்கு ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டுவரவும். அகத்திக்கீரை பொடியாகவே நாட்டுமருந்துக் கடைகளில் இப்போது கிடைக்கிறது. அதை வாங்கி ஒரு டம்ளர் மோரில் ஒரு ஸ்பூன் கலந்து வெறும் வயிற்றில் வாரத்துக்கு 3 முறை சாப்பிடவும். இம் மூன்றுக்கும் அது நல்ல மருந்து.


3. படபடப்புக்கு:

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சுக்குப்பொடி சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பிறகு, ஒரு கட்டி வெல்லத்தைச் சேர்த்துக் கொதித்ததும் இறக்கி மிதமான சூட்டில் காலை, மாலை என்று 3 நாளைக்குத் தொடர்ந்து சாப்பிட்டால் படபடப்பு நீங்கிவிடும்.

4. நாக்கில் வெண்படலம் படிந்திருந்தால்:

துளிராக ஏழு அல்லது எட்டு வேப்பங் கொழுந்தை எடுத்துக்கொள்ளவும். ஒரு சிறிய துண்டு அதிமதுரத்தைத் தட்டி, ஒரு டம்ளர் நீரில் வேப்பங்கொழுந்தையும் அதிமதுரத்தையும் சேர்த்துக் கொதிக்க விடவும். அதை வடிகட்டித் தேன் சேர்த்துக் குடித்தால் ஜீரண சக்தி ஏற்படும். நாக்கில் படிந்த வெண்படலம் மறைந்துவிடும்.

5. வயிற்றுப் பருமன் குறைக்க:

ஓமம் 2 ஸ்பூன், ஒரு ஸ்லைஸ் (பத்தை அல்லது கீற்று) அன்னாசியை எடுத்துக்கொள்ளவும். அன்னாசியை 3 சிறு துண்டுகளாக்கவும். இதைத் தண்ணீரில் தனித்தனியாக ஊற வைக்கவும். 20 நிமிஷங்களுக்குப் பிறகு இரண்டையும் அந்தத் தண்ணீரை விட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அதை அப்படியே டம்ளரில் ஊற்றிவைக்கவும். அதில் உள்ள மேல்நீரை (தெளிந்தது) மட்டும் காலையிலும் மாலையிலும் அப்படியே இறுத்து, வடிகட்டாமல் குடிக்கவும். இதனால் வயிறு இளைக்கும்.

6. உடல் பருமன் குறைய

வெள்ளைப் பூசணிக் காயை எடுத்து ஜூஸ் பிழிந்து காலையில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். நெஞ்சு எரிச்சலும் வராமல் இருக்கும்.

7. சிறுநீரகத்தில் உப்பு தங்காமல் இருக்க

வாழைத்தண்டு, புடலங்காய், கீரைத் தண்டு, முள்ளங்கி, திராட்சை, வெங்காயம், வெள்ளரிப் பிஞ்சு, வெங்காயத்தாள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

8. ரத்த அழுத்தம் குறைய

செம்பருத்திப் பூக்கள் மூன்றை எடுத்து அவற்றின் இதழ்களைத் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். பிறகு எடுத்துப் பிழிந்து வடிகட்டி, கொஞ்சம் பால் சேர்த்துச் சாப்பிட்டால் ரத்தஅழுத்தம் குறையும்.

9. பித்தம் தலைசுற்றல்

1 பிடி கொத்தமல்லித் தழையை அரைத்துச் சாறு எடுக்கவும். அதில் பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிட, தலைசுற்றல் போகும்.

10. புழு வெட்டு, வழுக்கை

1 கோப்பை நல்லெண்ணெயில் 7, 8 பூண்டை நசுக்கிப் போடவும். அதை நன்றாகக் காய்ச்சவும். இறக்கி வைத்து 1 மூடி எலுமிச்சம் பழத்தில் சாறு பிழிந்து எடுத்துச் சேர்த்து வைக்கவும். பூச்சிவெட்டு இருக்கும் இடத்தில் 2 சொட்டு தேய்த்து வர, முடி வளர ஆரம்பிக்கும்.

11. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க

நாவல் கொட்டை பொடி, வெந்தயப் பொடி, கடுக்காய் தோல் ஆகியவற்றில் சமபாகம் எடுத்துக் கலந்து வைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் இதை 1 ஸ்பூன் போட்டு நன்றாகக் கலந்து காலையில் கால் டம்ளர் குடிக்கவும்.

12. வறட்டு இருமல், சூடு

அதிமதுரம் பொடியை வாங்கி, 1 டம்ளர் நீரில் 1 ஸ்பூன் பொடி போட்டுக் கொதிக்க வைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடவும்.

13.வாயு, வயிற்றுவலி

1 ஸ்பூன் ஜீரகத்தை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து 1 டம்ளர் தண்ணீர் விடவும். நன்றாகக் கொதித்ததும் பனைவெல்லம் சேர்த்துக் குடிக்கவும்.

14. கர்ப்பப் பையில் நோய் வராமல் தடுக்க

துளசி, வில்வம், அருகம்புல், மிளகு உள்ளிட்டவை நாட்டு மருந்துக் கடைகளில் பொடியாகவே கிடைக்கும். இவற்றை வாங்கிக் கலந்து வைத்துக்கொண்டு வாரத்துக்கு ஒரு நாள் 1 ஸ்பூன் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.

15. நோய்எதிர்ப்பு சக்தி

தினம் குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சம் பழத்தைப் பாதியாக வெட்டி போடவும். மறுநாள் காலை வரை இந்தத் தண்ணீரைக் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோயை எதிர்க்கும் சக்தி இதில் உண்டு.

No comments:

Post a Comment