Tuesday, July 1, 2014

கீரை மருத்துவம் - திக்குவாய் குணப்படுத்தும் தரையில் படரும் வல்லாரை

வல்லாரை தரையில் படர்ந்து வளரும் இயல்புடையது. இதன் சிறுநீரக வடிவ இலைகள் கீரையாக பயன்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஓலிகோசேக்ரைட், லெப்ரெசி நோயை குணப்படுத்தும் மருந்தான அசியாடிகோசைட் உள்ளிட்டவை உள்ளன. வல்லாரை மூளைக்கான உணவு என அழைக்கப்படுகிறது. இது நினைவாற்றலை அதிகரிக்கும். பாக்டீரியாக்களை அழிக்கும், காயங்களை குணப்படுத்தும். பெங்கால் புலிகளுக்கு ஒரு பழக்கம் உள்ளது. 

அவை காயமடைந்தால் வல்லாரை வளர்ந்திருக்கும் பகுதிக்குச் சென்று வல்லாரை இலைகளை கடித்து விட்டு நாக்கால் காயத்தின் மீது நக்குமாம். அப்போது அதன் காயம் விரைவில் குணமடைந்து விடுமாம். இதனால் வல்லாரைக்கு புலிப்புல் என்ற பெயரும் உண்டு. லெப்ரசி, யானைக்கால் நோய் போன்றவற்றை குணப்படுத்தும் ஆயின்மெண்ட்களிலும் வல்லாரை பயன்படுத்தப்படுகிறது.


காய்ச்சலுக்கு:

வல்லாரை கீரை ஒருபிடி, துளசி இலைகள் ஒரு பிடி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இதை அரை கப் வீதம் தினமும் 3 வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும். இதனுடன் நல்லமிளகும் சேர்க்கலாம்.

சிறுநீர் பெருக்கி:

சிறுநீர் பையில் புண்கள், சிறுநீர் செல்லும் போது வலி உள்ளவர்கள் வல்லாரையை சாறு பிழிந்து 3 ஸ்பூன் சாறுடன், தேன் கலந்து தினமும் 3 நேரம் அருந்தலாம். இது சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது. ஒரு வாரம் இது போல் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

நினைவாற்றல் பெருக:

பாலில் வல்லாரையை நசுக்கி போட்டு காய்த்து தினமும் இரவு தூங்கும் முன்பு பருக வேண்டும். இது போன்று 3 வாரங்கள் செய்ய வேண்டும். அல்லது 5 கிராம் வல்லாரை பொடியை பாலில் கலந்து தினமும் இரண்டு நேரம் குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பல், ஈறு பாதுகாப்புக்கு:

வல்லாரை இலைகள், மா இலைகள், கொய்யா இலைகள், கிராம்பு, நல்லமிளகு, உப்பு சேர்த்து செய்யப்படும் பற்பொடி பல், ஈறுகளை பாதுகாக்கும்.

திக்குவாய் குணமாக:

தினமும் 5 வல்லாரை இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பேச்சு திருந்தும். திக்குவாய் குணமாகும்.

No comments:

Post a Comment